Actor Vishal and Director Hari reunite for a project -indiastarsnow.com

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன.
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படங்களை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் எடுப்பதில் வல்லவரான இயக்குநர் ஹரியும், அதிரடி ஆக்ஷன் நடிப்புக்கு புகழ் பெற்ற நடிகர் விஷாலும் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ வெற்றிப் படங்களுக்கு பிறகு இணையும் இப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.
ஜீ ஸ்டுடியோசின் சவுத் மூவிஸ் தலைவர் அக்ஷய் கேஜ்ரிவால் படம் பற்றி பேசுகையில், “ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து இந்த மதிப்புமிகு திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படத்தை ரசிகர்களுக்கு நாங்கள் வழங்கவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. விஷால் தனது ஆற்றல் நிறைந்த நடிப்பால் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்துள்ளார். தலைசிறந்த இயக்குநரான ஹரி கைவண்ணத்தில் இப்படம் உருவாவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவதே ஜீ ஸ்டுடியோசில் உள்ள எங்கள் நோக்கம். இந்த படம் அந்த திசையில் ஒரு நேர்மறையான படியாகும்,” என்றார்.
படத்தைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “ஸ்டோன்பெஞ்சில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது மிகவும் முக்கியமான திரைப்படம். முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் என அனைத்து பிரிவினர் உடனும் இணைந்து சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். தயாரிப்பாளர்களாகிய விஷால் மற்றும் ஹரி உடனான இந்த உற்சாகமிக்க திரைப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,” என்றார்.
சுவாரசியமான கதைக்களம் மற்றும் பரபரப்பான திரைக்கதை கொண்ட இப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், திரைப்படம் குறித்த மேலும் தகவல்கள் படக்குழுவினரால் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
