Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • “திரையரங்கில் ரசிக்க வேண்டிய திரைப்படம் ‘போர் தொழில்’”

“திரையரங்கில் ரசிக்க வேண்டிய திரைப்படம் ‘போர் தொழில்’”

admin May 31, 2023

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா,, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ் மேத்தா, எப்ரியாஸ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த சந்தீப் மெஹ்ரா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குநர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ், நடிகர்கள் ஆர். சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தென் மண்டலத் தலைவரான பிரமோத் செருவய்யா பேசுகையில்,” எங்களுடைய அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ஐந்து ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறது. ஏராளமான இணைய தொடர்களை உருவாக்கியிருக்கிறோம். தமிழில் ‘குருதி களம்’, ‘இரு துருவம்’ என வெற்றி பெற்ற இணைய தொடர்களை தயாரித்து வழங்கியிருக்கிறோம். ‘போர் தொழில்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடியாகத் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். மிகவும் வித்தியாசமான திரைப்படம். இயக்குநர் விக்னேஷ் ராஜா ரசிகர்களுக்கு அருமையான இன்வெஸ்டிகேட் திரில்லர் ஜானரிலான திரைப்படத்தை வழங்கி இருக்கிறார். இதுபோன்ற தரமான படைப்புகளை எங்கள் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கலாம் ‘போர் தொழில்’ திரைப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

எப்ரியாஸ் ஸ்டூடியோஸின் தலைவரான சந்தீப் மெஹ்ரா பேசுகையில், ” இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அனைவருக்கும் பிடித்திருந்தா?.. பிடித்திருந்தது எனில், ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து, உங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் திரைப்பட வணிக பிரிவின் தலைவரான சுனில் சாய்னானி பேசுகையில், ” இந்த படத்திற்கு அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இணைந்து தயாரித்த E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் நிறுவனத்தின் முகேஷ் மேத்தா மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத் தலைவரான சந்தீப் மெஹ்ரா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலகட்டத்தின் போது இணைய தள சந்திப்பின் மூலம் இயக்குநர் விக்னேஷ் ராஜா முப்பது நிமிடம் இப்படத்தின் கதையை விவரித்தார். ஆனால் படத்தை பார்க்கும் போது இணையதளம் மூலமாக விவரித்ததை விட, பல மடங்கு நேர்த்தியாக உருவாக்கியிருந்தார். இதற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜாவை மனதார பாராட்டுகிறேன். இந்தத் திரைப்படத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் என மூவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த முகேஷ் மேத்தா பேசுகையில், ” புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் படத்தை தயாரிக்க தீர்மானித்தோம். அந்த தருணத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா விவரித்த கதை பிடித்திருந்தது. விக்னேஷ் ராஜா யாரிடம் கதை சொன்னாலும், ‘ கதை நன்றாக இருந்தது’ என அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள். இப்படத்தின் கதையை கேட்ட நடிகர் அசோக் செல்வன், அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க சம்மதித்தார். எப்ரியாஸ் ஸ்டுடியோவை சேர்ந்த சந்தீப்பும், அவர்களும் நன்றாக தொடர்பில் இருந்ததால், இணைந்து பணியாற்றினோம். இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக சரத்குமார் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தப் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த சக்திவேலனை நன்குத் தெரியும். அவர் கடும் உழைப்பாளி. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சென்றடையும் வகையில் திரையரங்கில் வெளியீடும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.

அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று திரைப்படங்களை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரைத்துறை ஆரோக்கியமாக இயங்கும். திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகுதான், நட்சத்திரங்கள் நற்பெயரை சம்பாதித்து இருக்கிறார்கள். ‘போர் தொழில்’ திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ” போர் தொழில் படத்தை பார்த்து விட்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தரமான படைப்பாக தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா நான்கு மாதங்களுக்கு முன்னரே இப்படத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ‘ராட்சசன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, எவ்வாறான உணர்வு ஏற்பட்டதோ.. அதைவிட ஒரு மடங்கு கூடுதலான உணர்வை இந்த திரைப்படம் அளிக்கும்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ திரைப்படத்தை திட்டமிட்டு தயாரிப்பதுடன், அதனை விளம்பரப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் போன்றவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள். சரத்குமார் இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சரத்குமாரின் இடத்தை நிரப்புவதற்கு தென்னிந்தியாவில் எந்த நட்சத்திரங்களும் இல்லை என உறுதியாக கூறலாம். அவர் இந்த படத்தில் தன் திறமையான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த ‘போர் தொழில்’ படத்தை வெளியிடுகிறேன். இந்தத் திரைப்படத்திலும் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, உச்சகட்ட காட்சியில் நம் மனதில் பதிந்து விடுவார்.

படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய விதத்தை பார்த்து, ‘இந்த இயக்குநர் எதிர்காலத்தில் சிறந்த இயக்குனராக வருவார்’ என இப்படத்தில் நடித்திருக்கும் மூத்த தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் என்னிடம் தெரிவித்திருக்கிறார். இந்த இளம் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் ‘போர் தொழில்’ திரைப்படம் சுவாரசியமான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.” என்றார்.

இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ் பேசுகையில், ” அவ்வையாரின் ஆத்திச்சூடிப்படி, ‘போர் தொழில் புரியேல்’. பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின்படி ‘போர் தொழில் பழகு’. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டதால் அவ்வையார் ‘போர் தொழில் வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள். பாரதியார் காலகட்டத்தில், நாம் வெளியிலிருந்து அடக்கப்பட்டதால், ‘போர் தொழில் பழகு’ எனக் குறிப்பிட்டார். தற்போதுள்ள காலகட்டத்தில் இதில் எது சரி..? இது என்ன? என்பதையும், இரண்டு நேர் எதிர் கருத்தியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும் களம் தான் இந்த திரைப்படம். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளரும் நடிகருமான பி. எல். தேனப்பன் பேசுகையில், ” இப்படத்தின் தயாரிப்பாளர்களை ஒருவரான சி வி சாரதி, என்னுடைய நண்பர். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் திறமையை கண்டு வியந்தேன். படப்பிடிப்பின் போதே இப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. ” என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில், ” என்னை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தயாரிக்கும் ‘போர் தொழில்’ படத்திலும் நடித்திருக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாரதி, ‘இயக்குநரிடம் கதையை கேளுங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம்’ என கூறினார்.

ஒரு சின்ன கதையை சொல்கிறேன். அதற்கு முன் ஒரு குட்டி பிளாஷ்பேக். இயக்குநர் ஒருவர் என்னிடம் கதை சொல்ல வருகை தந்தார். லேப்டாப்பை திறந்து வைத்து, கதையை சொல்லத் தொடங்கினார். கதையை முழுவதுமாக சொல்லி முடித்தார். அதன் பிறகு நான் அவர் திறந்து வைத்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், ‘லேப்டாப்பை ஒரு பில்டப்புக்காக திறந்து வைத்திருக்கிறேன். மற்றபடி அதில் எந்த விசயமும் இல்லை’ என்றார்.

இதற்கு அடுத்த நாள் தான் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை சொல்ல வந்தார். அவரும் வந்தவுடன் லேப்டாப்பை திறந்து வைத்தார். மனதில் நேற்றைய சம்பவம் ஓடியது. இருப்பினும் கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த இசை, லேப்டாப்பிலிருந்து ஒலிக்கிறது என சொன்னார். முதன் முதலாக பின்னணி இசை ஒலிக்க, கதையை சொல்லி என்னை கவர்ந்தார்.

என்னுடைய திரையுலக பயணத்தில் மிக விரைவாக நடிக்க சம்மதம் தெரிவித்த திரைப்படம் ‘போர் தொழில்’. படத்தின் கதை சிறப்பாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தின் அளவைப் பற்றி கூட கவலைப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறோம். அதனால் நல்லதொரு தரமான கதையுடன் திரையில் தோன்ற வேண்டும் என விரும்பினேன். அது இந்த ‘போர் தொழில்’ படத்தில் இருக்கிறது. ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்கில் சந்திப்போம்.” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ” எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில்.. இப்படத்தில் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம். இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும்.. விளம்பர படங்களிலும்.. பணியாற்றிருக்கிறேன். மிகத் திறமையான படைப்பாளி. கடும் உழைப்பாளி. விக்னேஷ் ஒரு கதையை சொன்னால் நன்றாக இருக்கும். அதுவும் இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன். இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.

இயக்குநரின் கற்பனையை எப்படி சாத்தியப்படுத்தப்போகிறோம் என எண்ணினேன். என்னுடன் அனுபவம் மிக்க சரத்குமார் இணைந்து நடிக்கும் பொழுது அது எளிதாக இருந்தது. சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இதற்கு முன்னர் அனுபவமிக்க நாசர் அவர்களுடனும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய பழகும் விதத்தை கண்டு வியந்திருக்கிறேன். அவரை சந்திக்க சினிமா, அரசியல்.. என பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் வருகை தந்து கொண்டிருப்பர். அவர் எப்போதுமே பரபரப்பாகவே இருப்பார். இந்த வயதிலும் மதிய உணவாக சூப்பை அருந்துகிறார். அதன் பிறகு சத்தான உணவுகளை சாப்பிடுவார். இது, அவரைப் போல் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் உருவாக்கியது. அவருடன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக ‘போர் தொழில் 2’ வில் நடிக்க விருப்பம்.

நடிகை நிகிலா விமலுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம். அவர் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எனக்கு காதலியாக நடிக்கவில்லை. அதில் சின்ன வருத்தம் இருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள்.

என்னுடைய சொந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இயக்குநர் விக்னேஷ் ராஜா எதிர்காலத்தில் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக உயர்வார். இதை நான் நண்பர் என்பதால் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அவருடைய திறமையை இந்த ‘போர் தொழில்’ படம் வெளிப்படுத்தும்.

இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பாருங்கள். பிடித்திருந்தால் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ஆதரவளியுங்கள். ஏனெனில் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது, ரசிகர்களுக்கு சிறப்பான உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் காட்சி அமைப்பு.. ஒலி.. சிறப்பு சப்தங்கள்.. அனைத்தும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அமெரிக்காவிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்க வேண்டாம். ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தெகிடி’ படத்திற்குப் பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான திரைக்கதை இந்த ‘போர் தொழில்’ படம். திரில்லர் ஜானரிலான படத்தை பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த ‘போர் தொழில்’ படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகர் ஆர்.. சரத்குமார் பேசுகையில், ” இயக்குநர் விக்னேஷ் என்னை சந்தித்து கதை சொல்லும் போது ஒரு சிறிய அளவிலான ஸ்பீக்கரை டேபிளில் வைத்தார். அதிலிருந்து இசை ஒலிக்க.. பின்னணி இசையுடன் ஒரு கதையை முழுவதுமாக விவரித்தார். இப்படத்தின் கதையை நேர்த்தியாக விவரிக்க, முழுமையாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் கூட படப்பிடிப்பின் போது வேறு ஏதேனும் கதைகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, ‘இருக்கிறது. முதலில் இதை நான் நிறைவு செய்கிறேன்’ என உறுதிப்பட தெரிவித்தார். இதில் அவர் ஒரு முழுமையான கலைஞர் என்பதை உணர முடிந்தது.

இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாகிவிட்டது. 40க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்தாகிவிட்டது. இதில் என்ன வித்தியாசம்? என்றால், மூத்த அதிகாரியாக பணியாற்றுவதுடன் மட்டுமல்லாமல், புதிதாக பயிற்சிக்கு வரும் இளம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன்.

எலியும், பூனையுமாக இருக்கும் இரண்டு கதாபாத்திரங்கள், எப்படி உச்சகட்ட காட்சியில் ஒன்றிணைந்து குற்றவாளியை கண்டறிகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தை காவல்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் காண வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் குற்றவாளியின் மூளைக்குள் ஊடுருவி அவன் ஏன்? இந்த குற்றத்தை செய்தான் என்பதை கண்டறிய வேண்டும் என்பதை மிக விரிவாக இப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு தரப்பினர் பல அதிரடியான திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இருப்பினும் நல்ல முறையில் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த திரைப்படம், ஒரு சீரியஸான படமல்ல. அசோக் செல்வன் ஆங்காங்கே சில நடிப்பையும், வசனங்களையும் பேசுவார். அது சிரிப்பை வரவழைக்கும்.

இன்று மக்கள் திரையரங்கிற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிப்பது குறைந்து வருகிறது. ஒரு மாதம் காத்திருந்தால் ஓ டி டி யில் பார்த்து விடலாம் என எண்ணுகிறார்கள்‌. ஆனால் இந்தப் ‘போர் தொழில்’ திரைப்படம் திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம் அதனால் ஜூன் ஒன்பதாம் தேதியன்று வெளியாகும் ‘போர் தொழில்’ படத்திற்கு திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், ” இயக்குநராக இருந்தாலும் எந்த விமர்சனத்தையும் சாதகமாகவே எடுத்துக் கொள்வேன். ‘போர் தொழில்’ போன்றதொரு படத்தை உருவாக்குவதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இல்லை என்றால் சாத்தியமாகி இருக்காது. நான் இந்த படத்தை நினைத்த மாதிரி சுதந்திரமாக உருவாக்கி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களை நன்றி தெரிவிக்க வேண்டும் என ஒரு பட்டியலை தயாரித்தேன் அது மிக நீண்டதாக இருந்தது. அதனால் அனைவருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் இயக்குநர் என என்னுடைய பெயர் இடம் பெற்றிருந்தாலும், இதன் பின்னணியில் பலரின் கூட்டு முயற்சி இருந்திருக்கிறது. நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. இருப்பினும் அனைவரும் பல விதங்களில்.. பல விசயங்களில்.. கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் – புலனாய்வு பாணிலான திரில்லர் திரைப்படம். படம் பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தந்த ஐந்து நிமிடத்திற்கு பின் புத்திசாலித்தனமாகவும், உணர்வுபூர்வமாகவும் இப்படத்தின் கதை அமைந்திருப்பதை உணர்வீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன். பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் இப்படத்தில் திரைக்கதையை அடர்த்தியுடன் உருவாக்கி இருக்கிறோம்.

படத்தைப் பார்த்த பிறகு கதையை விவரிக்காமல், விமர்சனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் இது சாத்தியமா? என தெரியவில்லை. ஏனெனில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் போது கிடைக்கும் பரவச உணர்வு… ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.” என்றார். https://youtu.be/CfKZUZR1UDk

Post navigation

Previous Athulya Senior Care LaunchesDementia Care Servicesin Chennai
Next ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.