சென்னை: 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ வழங்கிய வியாபாரி

சென்னை :

சென்னை வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர், தீபாவளியை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி முதல் தினமும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ விற்பனை செய்து வருகிறார்.

இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச் செல்கின்றனர். முதல் சில நாட்கள் தினமும் 50 பேர் மட்டும் வாங்கி சென்றனர். அதன்பிறகு கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் தினமும் 200 பேர் வீதம் டோக்கன் கொடுத்து வழங்கி வருகிறார்.

இதற்காக அதிகாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன் பெற்று 1 ரூபாய் கொடுத்து சட்டையும், 10 ரூபாய் கொடுத்து ‘நைட்டி’யும் வாங்கிச்செல்கின்றனர்.

இதுபற்றி துணிக்கடை வியாபாரி ஆனந்த் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து கொண்டாடுவார்கள். ஆனால் ஏழை, எளிய மக்களும் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை அறிவித்தேன்.

ஒரு பொருளை இலவசமாக கொடுத்தால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் 1 ரூபாயை வாங்கிக்கொண்டு சட்டை வழங்கி வருகிறேன். இதனால் வாங்குபவர்களுக்கும் மதிப்பாக இருக்கும். மற்ற வணிகர்களை பாதிக்காத வகையில் தினமும் காலை 1 மணிநேரம் மட்டுமே இதுபோல் வழங்கி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Uncategorized
Comments (0)
Add Comment