அகத்தியிலை இலைக்கஞ்சி

அகத்தியிலை இலைக்கஞ்சி

தேவையான பொருட்கள்
அரிசி : 100 கிராம் (1/2 சுண்டு)
பயறு : 25 கிராம் (1 மேசைக்கரண்டி)
அகத்தியிலை : 1 பிடி
தேங்காய்: பாதி
நற்சீரகம் : 1/2 தேக்கரண்டி
மிளகு : 4, 5
உப்பு : தேவையான அளவு

தயாரிக்கும் முறை:

பச்சையரிசி அல்லது புழுங்கலரிசியைப் பாவிக்கலாம். அரிசி குறுணலாக இருப்பது நல்லது. அரிசியை நன்கு சுத்தம் செய்து. கழுவிக் கல்லரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பானையில் நீர்விட்டு, கொதிக்க வைத்து, நீர் நன்கு கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்கு வேகவிடவும். பயறு அல்லது பயற்றம் பருப்பைச் சேர்ப்பதாயின் அதனையும் சுத்தம் செய்து அரிசியுடன் போட்டு நன்கு வேக வைக்கவும்.
பயறு சேர்ப்பதாயின் அதனை முளைகட்ட வைத்துச் சேர்ப்பதே நல்லது. முளைகொண்ட பயற்றில் விற்றமின் கி,ரி என்பன அதிகளவில் இருக்கும். பயற்றை முதல்நாள் காலையில் நீரில் ஊறவிட்டு, மாலையில் வடித்து, ஒரு ஈரத்துணியில் முடிந்து வைத்தால் மறு நாட் காலையில் முளை வந்திருக்கும். முளைகட்டிய பயற்றை அரிசி ஓரளவு வெற்றி பின்னர் சேர்த்துக்கொள்வது நல்லது.
அகத்தியிலையைச் சுத்தம் செய்து உருவி எடுத்துக்கொள்ளவும். தேவையானால் ஒன்றுக்கிரண்டாகக் குறுணலாக வெட்டிக்கொள்ளவும். அரிசி ஓரளவு வெந்துவரும் போது அகத்தியிலையையும் சேர்த்து வேகவிடவும்.
தேங்காய்ப் பாதியைத் துருவிப் பிழிந்து பாலெடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி, பருப்பு, அகத்தியிலை என்பன நன்கு வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கொதிக்க விடவும். அத்துடன் மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போட்டு தேவையான அளவு உப்பையும் போட்டு, இரண்டு கொதி கொதித்ததும் இறக்கிக்கொள்ளவும். இக்கஞ்சியை இளஞ்சூடாக இருக்கும்போதே பருகுவது நல்லது. தேவையானால் பனங்கட்டி அல்லது வெல்லம் சேர்த்தும் இக்கஞ்சியைப் பருகலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயோதிபருக்கும் இது ஒரு போசாக்குள்ள கஞ்சியாக அமையும்.

#100 கிராம் அகத்தி இலையில்
8.4 கிராம் புரதச் சத்து, 1.4 கிராம் கொழுப்புச் சத்து, 11.8 கிராம் காபோவைதரேற்று, 1130 மி.கி.கல்சியம், 80 மி.கி.பொஸ்பரஸ், 3.9 மி.கி இரும்புச் சத்து, 5400 மை.கி.கரோற்றின், 210 மை.கி.தயமின், 90 மைகி.இரையோபிளேவின், 169 மி.கி.விற்றமின் சி என்பன உள்ளன.

இதன் போசாக்குச் சத்துக் கருதியே ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தமது உபவாசத்தை முடித்துக் கொள்ளும்போது அவர்களின் உணவில் அகத்திக்கீரை கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று எமது முன்னோர்கள் விதித்து வைத்தனர் போலும்.
அகத்தியிலையானது மலச்சிக்கல், இரத்தச் சோகை, குடற்புண், வாய் அவியல் அல்லது வாய்ப்புண், நாச்சுவையின்மை என்பவற்றைப் போக்கவல்லது. உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

Uncategorized
Comments (0)
Add Comment